முகமது ஹனீப் மீண்டும் ஆஸி. திரும்ப கோர்ட் அனுமதி
இங்கிலாந்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சம்பந்தப்பட்ட சபீல் அகமது மற்றும் கபீல் அகமது ஆகியோருடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார் ஹனீப். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் விசாரணையில் அவருக்கும், கபீல் சகோதரர்களுக்கும் இடையே உறவினர்கள் என்ற தொடர்பைத் தவிர தீவிரவாத தாக்குதலில் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து ஹனீப்
விடுவிக்கப்பட்டு நாடு திரும்பினார்.
இந்த நிலையில் ஹனீப்பின் பணி விசாவை ரத்து செய்த அப்போதைய ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸின் உத்தரவை ரத்து செய்து கடந்த ஆகஸ்ட்டில் பிரிஸ்பேன் உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டது.
இதை எதிர்த்து முழு பெஞ்ச் முன்பு ஆஸ்திரேலிய அரசு அப்பீல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மைக்கேல் பிளாக் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த தீர்ப்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாக்டர் முகமது ஹனீப்பின் விசாவை திரும்ப வழங்க உத்தரவிட்டது. மேலும் அவர் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் பணிபுரியவும் அனுமதி வழங்கியுள்ளது.
எனவே டாக்டர் ஹனீப் மீண்டும் விரைவில் ஆஸ்திரேலியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஹனீப் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றத்தின் உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.