கேஷுபாய் படேலுக்கு பாஜக மேலிடம் நோட்டீஸ் - 2 எம்.பிக்கள் சஸ்பெண்ட்
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, எதிராக செயல்பட்டு வரும் முன்னாள் முதல்வர் கேஷுபாய் படேல் மற்றும் முன்னாள் மாநில தலைவர் காசிராம் ராணா ஆகியோருக்கு பாஜக மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதவிர சோமாபாய் படேல், வல்லப் பாய் கத்தாரியா ஆகிய இரு மோடி எதிர்ப்பு எம்.பிக்கள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் சமீபத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இதில், பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ளன.
இந்த நிலையில் நரேந்திர மோடியின் எதிர்ப்பாளர்கள் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது.
தேர்தலில் ஓட்டுப் போடாமல் புறக்கணித்த முன்னாள் முதல்வரும், மோடியின் தீவிர எதிர்ப்பு தலைவர்களில் ஒருவருமான கேஷுபாய் படேல் மற்றும் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் காசிராம் ராணா ஆகியோரிடம், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்குள் தங்களது நிலை குறித்து அவர்கள் விளக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் அனுப்பியுள்ள நோட்டீஸில், செய்தித் தாள்கள், டிவி சானல்களைப் பார்த்தபோது, சட்டசபைத் தேர்தலில் கட்சியின் வெற்றியைத் தடுக்கும் வகையில் நீங்கள் செயல்பட்டுள்ளதாக முடிவுக்கு வர வேண்டியுள்ளது.
உங்களது நடவடிக்கை கட்சி விரோதமானது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய செயல். எனவே உங்களது நிலைக்கு என்ன காரணம் என்பதை ஒரு வாரத்திற்குள் விளக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதேபோல மோடியின் தீவிர எதிர்ப்பாளர்களான எம்.பிக்கள் சோமாபாய் படேல், வல்லப் பாய் கத்தாரியா ஆகியோர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.