பிரபாகரனுக்கு இந்தியாவில் சிகிச்சை?

நவம்பர் 26ம் தேதி கிளிநொச்சியில் உள்ள ஜெயந்திநகர் பகுதியில் இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் பிரபாகரன் படுகாயமடைந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை விடுதலைப் புலிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
ஆனால் தாக்குதலில் பிரபாகரன் காயமடைந்தது உண்மைதான், அவர் படுகாயமடைந்திருக்கிறார் என்று சமீபத்தில் மீண்டும் இலங்கை அரசும், பாதுகாப்புப் படையினரும் உறுதியாக தெரிவித்தனர்.
இந் நிலையில் பிரபாகரன் படுகாயமடைந்த நிலையில் இருப்பதாகவும், அவரது உடல் நிலை மோசமடைந்து வருவதாகவும், எனவே வெளிநாடு கொண்டு சென்று அவருக்கு சிகிச்சை அளிக்க புலிகள் முயன்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் தி டெய்லி நியூஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், நவம்பர் 26ம் தேதி நடந்த விமானத் தாக்குதலில், பிரபாகரனுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணியில் இருந்த 200 மெய்க்காவலர்களில் 116 பேர் இறந்து விட்டனர்.
பிரபாகரன் படுகாயமடைந்துள்ளார். அவரது ஒரு கையும், காலும் பலத்த சேதமடைந்துள்ளது. அவருக்கு தற்போது விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆனால் ஏற்கனவே பிரபாகரனுக்கு சர்க்கரை நோய் இருப்பதால் காயம் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. எனவே ஏதாவது வெளிநாடு ஒன்றுக்குக் கொண்டு சென்று சிகிச்ைச அளிக்க புலிகள் முயன்று வருகின்றனர்.
குறிப்பாக இந்தியாவுக்கு கொண்டு செல்வதையே அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் அதைத் தடுக்கும் முயற்சியில் இலங்கையின் முப்படைகளும் மும்முரமாக இறங்கியுள்ளன என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய தகவல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
பிரபாகரன் உடல் நிலை குறித்து வெளியாகியுள்ள இந்தத் தகவலால் இலங்கையில் தமிழர் பகுதிகளிலும் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications