3 பேர் பலியான விபத்து: போலியாக சரணடைந்த கார் டிரைவர் தலைமறைவு
சென்னை: கார் மோதி 3 பேர் பலியான வழக்கில், என்.இ.பி.சி நிறுவனத்தின் தலைவரின் மகனைக் காப்பற்றுவதற்காக போலீஸாரிடம் குற்றவாளி என்று கூறிக் கொண்டு போலியாக சரணடைந்த கார் டிரைவர் தப்பியோடி விட்டார். அவரைப் பிடிக்க போலீஸார் கொடைக்கானல் விரைந்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் புது ஆவடி சாலையில் சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் தாறுமாறாக வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதி மோட்டார் சைக்கிளில் வந்த வாஞ்சிநாதன் என்கிற கோவில் பூசாரியும், பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த ஒரு பெண் உள்ளிட்ட இரு கட்டுமானத் தொழிலாளர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த போலீஸார், காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது 15 வயது சிறுவன் அச்சல் குமார் என்பதைக் கண்டுபிடித்தனர். அச்சல் குமாரின் தந்தை ரவிபிரகாஷ் கெம்கா, என்.இ.பி.சி நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
விபத்துக்குப் பின்னர் உ.பிக்கு தப்பி ஓடி விட்டார் அச்சல் குமார். அங்கிருந்தபடி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், அச்சல் சிறார் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெறலாம் என அறிவுறுத்தியது. இதையடுத்து சிறார் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றுள்ளார் அச்சல்.
இந் நிலையில், அச்சல் தலைமறைவாக இருந்தபோது, நான்தான் காரை விபத்துக்குள்ளாக்கினேன் என்று கூறி கெம்காவின் அலுவலகத்தில் டிரைவராகப் பணியாற்றும் சர்மா என்பவர் போலீஸில் சரணடைந்தார். போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்து விட்டார்.
ஆனால் அச்சல்தான் குற்றவாளி என்பதில் உறுதியாக இருந்த போலீஸார் அதுதொடர்பான பல ஆதாரங்களையும் திரட்டினர். இதையடுத்தே அச்சல் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந் நிலையில் ஜாமீனில் வெளியே வந்த டிரைவர் சர்மா தலைமறைவாகி விட்டார். சர்மாவைத் தேடி போலீஸார் அவரது வீட்டுக்குப் போனபோது அவர் அங்கு இல்லை. கொடைக்கானலுக்கு அவரை கெம்கா அனுப்பி வைத்து விட்டதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து கொடைக்கானலுக்கு போலீஸ் படை விரைந்துள்ளது. போலியாக சரணடைந்தது தொடர்பாக சர்மாவைக் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, விபத்துக்குக் காரணம் சிறுவன் அச்சல் இல்லை, தேவ் என்கிற டிரைவர்தான் காரணம் என போலீஸ் தரப்பிலேயே சிலர் புதிதாக கூறி வருவதால் வழக்கில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கெம்காவின் மகனைக் காப்பாற்ற பல்வேறு தரப்பிலும் போலீஸுக்கு நெருக்கடி இருந்து வருவதாக முன்பு செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம். ஆனால் போலீஸார் உறுதியாக இருந்து வருவதால் சிறுவனின் தரப்பு சற்று கலங்கிப் போய்த்தான் உள்ளது.