சென்னையில் கடும் பனிமூட்டம் - விமானப் போக்குவரத்து பாதிப்பு
சென்னை: சென்னை நகரில் இன்று காலை நிலவிய கடும் பனிப்பொழிவு மற்றும் பனி மூட்டம் காரணமாக சில மணி நேரங்களுக்கு இயல்பு வாழ்க்கை பாதித்தது.
சென்னையில் இன்று காலை திடீரென பனிப்பொழிவும், பனி மூட்டமும் அதிகமாக இருந்தது.
அதிகாலையில் ஆரம்பித்த இந்த பனிப்பொழிவு 9 மணி வரை விலகவில்லை. இதனால் சென்னை நகர வாசிகளுக்கு ஊட்டி, கொடைக்கானலில் இருக்கிறோமோ என்ற குழப்பம் ஏற்பட்டது. பலர் பனிப்பொழிவை கண்டு ரசித்தனர்.
ஆனால் இந்த பனிமூட்டத்தால் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதிகாலையில் சென்னைக்கு வந்த பல விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்தன.
கத்தார், ஷார்ஜா, பஹ்ரைன், மஸ்கட், துபாய் உள்ளிட்ட அரபு நாடுகள் பலவற்றிலிருந்த வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருவனந்தபுரம், பெங்களூர், ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
இதேபோல சென்னையிலிருந்து மதுரை, அந்தமான், டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக கிளம்பிச் சென்றன.
இதேபோல ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. கடும் பனி மூட்டம் காரணமாக ரயில்கள் மிக மிக மெதுவாக இயக்கப்பட்டன. சாலைப் போக்குவரத்தும் கூட ஓரளவு பாதிக்கப்பட்டது.
சென்னை கடற்கரையில் காலையில் வாக்கிங் சென்றவர்களுக்கு 50 மீட்டருக்கு முன்னால் உள்ளவர்களைக் காண முடியவில்லை. இருந்தாலும் பனி மூட்டத்தை ரசித்தபடி வாக்கிங், ஜாகிங்கை செய்தனர்.
இந்த திடீர் பனிப்பொழிவினால் பதட்டமடையத் தேவையில்லை என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்தது. தற்போது குளிர் காலம் ஆரம்பித்துள்ளது. எனவே இதுபோன்ற பனிப்பொழிவுகள் சகஜம்தான் என அது விளக்கியுள்ளது.
சென்னையில் குளிர் காலம் ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக கடும் பனிப்பொழிவு இன்றுதான் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications