அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஆந்திர மாணவர்களின் உடல் தகனம்
கர்னூல்: அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆந்திர மாணவர்கள் கிரண்குமார் அல்லம், சந்திரசேகர ரெட்டி கொம்மா ஆகியோரின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களில் தகனம் செய்யப்பட்டன.
அமெரிக்காவின் லூசியானா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவர்ளாக இருந்தவர்கள் அல்லம் மற்றும் கொம்மா.
இருவரும் தங்களது மனைவியருடன் அங்குள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்தனர்.
இந்த நிலையில் டிசம்பர் 14ம் தேதி விடுதி வளாகத்தில் இருவரும் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கருப்பர் இனத்தைச் சேர்ந்த 3 பேர்தான் அவர்களைக் கொன்றதாக கூறப்படுகிறது. கொள்ளையடிக்க வந்தபோது 3 பேரையும் அவர்கள் சுட்டுக் கொன்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அமெரிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். கம்ப்யூட்டர் மூலம் வரையப்பட்ட அவர்களின் உருவப் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. துப்பு கொடுப்பவர்களுக்கு பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொல்லப்பட்ட இரு மாணவர்களின் உடல்களும் ஆந்திராவுக்குக் கொண்டு வரப்பட்டன. நேற்று இருவரது உடல்களும் தகனம் செய்யப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருவரது உடல்களும் ஹைதராபாத் கொண்டு வரப்பட்டன. அங்கு இருவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீல் மல்க உடல்களைப் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் கிரண் குமாரின் உடல் அவரது ஊரான மஞ்சேரியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு நேற்று மாலை கோதாவரி ஆற்றங்கரையோரம் உடல் தகனம் செய்யப்பட்டது.
சந்திரசேகர் ரெட்டியின் உடல் கர்னூல் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள கிருஷ்ணா நகர் மயானத்தில் ரெட்டியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, இரு மாணவர்களின் உடல்களையும் ஆந்திரா கொண்டு வருவதற்கு ஆந்திர அரசும், அமெரிக்க நிர்வாகமும் சிறிதும் உதவவில்ைல என்று சந்திரசேகர் ரெட்டியின் மைத்துனர் சீனிவாச ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகமும் தங்களுக்கு சிறிதும் உதவவில்லை என்றும் அவர் குமுறியுள்ளார்.