தேர்தல் ஆணையம் மீது மோடி பாய்ச்சல்

தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் பேசியதாக நரேந்திர மோடி, சோனியா காந்தி, திக்விஜய் சிங் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு மூன்று பேரும் பதில் அளித்தனர்.
இந்தப் பதிலை பரிசீலித்த தேர்தல் ஆணையம் குஜராத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் தனது தீர்ப்பை அறிவித்தது.
அதன்படி 3 பேருமே தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளனர். இது ஏமாற்றம் அளிக்கிறது. நரேந்திர மோடியும், திக்விஜய் சிங்கும் எதிர்காலத்தில் இதுபோல நடந்து கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த தீர்ப்புக்கு பாஜக வியப்பும், அதிருப்தியும் தெரிவித்திருந்தது.
சோனியா காந்தியின் பேச்சுக்கு அதிருப்தி மட்டுமே தெரிவித்த தேர்தல் ஆணையம் நரேந்திர மோடியை மட்டும் எதிர்காலத்தில் இப்படி நடந்து கொள்ளக் கூடாது எச்சரித்திருப்பது பாரபட்சமானது என்று கூறியிருந்தது.
இந்த நிலையில், நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தான் போட்டியிட்டு வென்ற மணி நகர் தொகுதிக்கு சென்ற மோடி அங்கு பெரும் மக்கள் வெள்ளத்திற்கிடையே பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் ஆணையம் காலனி மணப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. முரண்பாடாக நடந்து கொள்கிறது.
இந்திய மண்ணில் பிறந்த மைந்தர்களான எனக்கும், திக்விஜய் சிங்குக்கும் ஒரு தீர்ப்பு, அந்நிய மண்ணில் பிறந்த சோனியா காந்திக்கு ஒரு தீர்ப்பு என தேர்தல் ஆணையம் நடந்து கொண்டுள்ளது வியப்பளிக்கிறது.
இந்தத் தேர்தலில் புதுப் புது வார்த்தைகளைப் பயன்படுத்தி எதிர் பிரசாரம் செய்தனர். ஆனால் அது மக்களிடையே எடுபடவில்லை. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதராக குஜராத் மக்கள் வாக்களித்துள்ளனர் என்றார் மோடி.












Click it and Unblock the Notifications