சென்னை ஏரி உடைந்தது - ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம்
சென்னை: சென்னை அருகே நெமிலிச்சேரி ஏரி உடைந்து தண்ணீர் புகுந்ததால் சென்னை புறநகரான பட்டாபிராமின் பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த அடை மழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி விட்டன. இந்த நிலையில் நெமிலிச்சேரியில் உள்ள ஏரி நேற்று உடைந்தது. இதை, அந்த ஏரியை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளவர்களே, தங்களது சுய பாதுகாப்பு கருதி உடைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏரியிலிருந்து திபுதிபுவென பாய்ந்தோடி வந்த தண்ணீர் பட்டாபிராம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. சோழன் நகர், சார்லஸ் நகர், நேரு நகர், திருவிக நகர், எம்.டி.எச். சாலை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
நெமிலிச்சேரி ஏரியின் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தற்போது வெறும் 55 ஏக்கர் நிலம் மட்டுமே ஏரியாக உள்ளது. ஏரியின் கரைப் பகுதி மற்றும் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாய் போன்றவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பாவி பட்டாபிராம் பகுதி மக்கள் குமுறுகின்றனர்.












Click it and Unblock the Notifications