திமுகவில் இணைந்தார் பொன்னுச்சாமி
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சரும், ஊழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி சிறை சென்றவரும், தேமுதிகவின் தேர்தல் பிரிவு செயலாளராக இருந்தவருமான பேராசிரியர் பொன்னுச்சாமி திமுகவில் இணைந்து விட்டார்.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவான பொன்னுச்சாமி ஜெயலலிதா அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். பின்னர் ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்றார்.
அதிமுகவில் ஓரம் கட்டப்பட்ட அவர் சமீபத்தில் தேமுதிகவில் இணைந்தார். அவருக்கு தேர்தல் பிரிவு செயலாளர் பதவி தரப்பட்டது. இருப்பினும் இப்பதவி தனக்கு மிகவும் சாதாரணமானது என்று கருதிய பொன்னுச்சாமி அதிருப்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இவரை திமுகவுக்கு இழுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து பொன்னுச்சாமி திமுகவில் இணைந்தார்.
அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications