அண்ணியிடம் செக்ஸ் டார்ச்சர்-நெல்லை ஏட்டு மகன் வெட்டிக் கொலை
நெல்லை: நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள பள்ளிக் கோட்டை கீழதெருவை சேர்ந்தவர் வேல்பாண்டிய ராஜா. ஓய்வு பெற்ற ஏட்டு. இவரது மகன் சுந்தர். இவருக்கு அன்னலெட்சுமி என்ற மனைவியும், இசக்கியம்மாள், லதா, ஜானகி என்ற 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
நேற்று காலை இவர் பூப்பறிப்பதற்காக தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சுந்தரை சராமரியாக வெட்டி தள்ளினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்ததும் எஸ்.பி ஸ்ரீதர், மானூர் இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி, மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க தாழையூத்து ஏ.எஸ்.பி ரூபேஸ் குமார் மீனா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் நடத்திய விசாரனையில் சுந்தரை கொலை செய்தது கூலிப்படையினர் என்பது தெரியவந்துள்ளது.
சுந்தர் தனது அண்ணன் மனைவியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதைத் தட்டிக் கேட்ட அண்ணியின் தாயை கத்தியால் குத்தியுள்ளார். இது தொடர்பான வழக்கு மானூர் காவல்நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் தான் அவர் கொலையாகியுள்ளார்.
சுந்தரின் அண்ணியின் உறவினர்கள் தான் கூலிப்படை மூலம் அவரை தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.