ஷார்ஜாவில் காருடன் கடலில் விழுந்த இந்தியர் சாவு
துபாய்: ஷார்ஜாவில் கடலில் காருடன் விழுந்த கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர் பிணமானார். நான்கு நாட்களுக்குப் பிறகு அவரது உடல் எடுக்கப்பட்டது.
கேரள மாநிலம் சிறையின்கீழ் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் குருப். இவர் ஷார்ஜாவில் உள்ள யுனைட்டெட் அரபு வங்கியில் பணியாற்றி வந்தார். டிசம்பர் 19ம் தேதி அல் குவாஸ் என்ற இடத்தில் உள்ள தனது நண்பரைப் பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அல் மம்சார் என்ற இடத்தில் உள்ள கழிமுகப் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே ஒரு கார் வேகமாக வந்தது. அதில் மோதி விடாமல் இருப்பதற்காக காரை திருப்பியுள்ளார் குருப். அப்போது கடலில் கார் விழுந்து விட்டது. இதில் குருப் இறந்துள்ளார்.
இந்த விவரம் தெரியாமல், நண்பரைப் பார்க்கப் போன குருப் திரும்பி வராததால் அவரது நண்பர்கள் பெரும் குழப்பத்தில் இருந்தனர். இதுகுறித்து ஷார்ஜாவைச் சேர்ந்த இந்தியர்கள் அமைப்பான சமதர்ஷினியைச் சேர்ந்தவர்கள் குருப்பை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் காருக்குள் பிணமாக குருப் கண்டுபிடிக்கப்பட்டார். விபத்தில் சிக்கிய அவர் கடலில் விழுந்தபோது மூச்சுத் திணறி காருக்குள்ளேயே பிணமாகி விட்டார். அவரது உடலை போலீஸார் கண்டுபிடித்து வெளியே எடுத்தனர். பின்னர் அவரது நண்பர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
குருப்புக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். அனைவரும் குருப்பின் திடீர் மரணத்தால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.