ஐ ஆம் வெரி டயர்ட்.. இறங்கிச் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட்
அகமதாபாத்: மும்பையிலிருந்து டெல்லி சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பனி மூட்டம் காரணமாக பயணிகளை அகமதாபாத்தில் இறக்கி பரிதவிக்க விட்டது.
ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களின் சேவை பயணிகளை பரிதவிக்க விடுவதில் முதலிடத்தில் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் இருந்து 100 பயணிகளுடன் நேற்று அதிகாலையில் டெல்லி சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் தரையிறங்காமல் வெகுநேரம் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது.
ஆனால் விமானிக்கு ஓடுபாதை தெரியாததால், இறுதியில் அந்த விமானம் அகமதாபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது. விமானியோ அகமதாபாத்தில் தரையிறங்கியவுடன் ஐ ஆம் வெரி டயர்ட் என்று சொல்லி, இதற்கு மேல் தன்னால் விமானத்தை இயக்க முடியாது என சொல்லி விட்டாராம்.
இதையறிந்த பயணிகள் அனைவரும், விமானத்தை விட்டு இறங்காமல் ஆத்திரத்துடன் இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். கடைசியில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் மற்றொரு விமானி மூலம் மாலை 4 மணிக்கு அனைத்து பயணிகளுடன் விமானம் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரி கூறியதாவது, விமானி அதிக நேரம் பணியில் இருந்ததால் சோர்வடைந்து விட்டார். அவரை மீண்டும் விமானத்தை இயக்க அனுமதிக்க முடியாது. ஆனால் பயணிகளுக்கு இது பற்றி தெரிவித்தும் அவர்கள் புரியாமல் சத்தம் போட்டனர்.
சோர்வடைந்த விமானிக்கு பயண நேரமும் முடிந்து விட்டதால், ஜெட் ஏர்வேஸின் மாற்று விமானி வரவழைக்கப்பட்டு விமானம் இயக்கப்பட்டு மீண்டும் டெல்லி புறப்பட்டு சென்றது என்றார்.