பெண் காவலரை கற்பழிக்க முயற்சி - பாளை.யில் பரபரப்பு
நெல்லை: பாளையங்கோட்டையில், வீடு புகுந்து பெண் போலீசை மர்ம நபர் கற்பழிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றுபவர் ஜோதி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பாளையங்கோட்டை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜோதியின் கணவர் மதுரையில் வேலை பார்க்கிறார்.
அவர் மனைவிக்கு போன் செய்து வீட்டுக்கு வருவதாக தெரிவித்தார். இதையடுத்து ஜோதி இரவில் கதவை மூடாமல் படுத்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
தனியாக படுத்திருந்த ஜோதியைப் பார்த்ததும் அவரைக் கற்பழிக்க முயன்றார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜோதி, சத்தம் போட்டுள்ளார்.
இதனால் பயந்து போன அந்த நபர் அங்கிருந்து ஓடி விட்டார். ஜோதியின் அலறல் சத்தம் கேட்டு குடியிருப்பில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.
காவலர் குடியிருப்புக்குள்ளேயே மர்ம நபர் புகுந்து பெண் காவலரை கற்பழிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணியிடம் செக்ஸ் டார்ச்சர் - ஏட்டு மகன் வெட்டிக் கொலை
இதற்கிடையே, நெல்லை மாவட்டம் மானூர் அருகே அண்ணன் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
மானூர் அருகே உள்ள பள்ளிக் கோட்டை கீழதெருவை சேர்ந்தவர் வேல்பாண்டியராஜா. ஓய்வு பெற்ற ஏட்டு. இவரது மகன் சுந்தர். இவருக்கு அன்னலெட்சுமி என்ற மனைவியும், இசக்கியம்மாள், லதா, ஜானகி என்ற 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
நேற்று காலை பூப்பறிப்பதற்காக சுந்தர் தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சுந்தரை சரமாரியாக வெட்டி தள்ளினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
வெகுநேரமாகியும் கணவர் திரும்பாததால் சந்தேகம் அடைந்த அன்னலெட்சுமி தோட்டத்திற்கு சென்று பார்த்தார். அங்கு அவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.
தகவல் அறிந்ததும் எஸ்.பி ஸ்ரீதர், மானூர் இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி, மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
கொலையாளிகளை பிடிக்க தாழையூத்து ஏ.எஸ்.பி ரூபேஸ் குமார் மீனா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரனையில் சுந்தரை கொலை செய்தது கூலிப்படையினர் என்பது தெரிய வந்துள்ளது.
சுந்தர் தனது அண்ணன் மனைவியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதைத் தட்டி கேட்ட அண்ணியின் தாயை கத்தியால் குத்தினார். இது தொடர்பாக மானூர் காவல்நிலையத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இவ்வாறு தொடர்ந்து பல்வேறு டார்ச்சர்களை சுந்தர் கொடுத்து வந்ததால் அவரை கூலிப்படை மூலம் சுந்தரின் அண்ணி குடும்பத்தினர் தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.