அதிமுக-தேமுதிக அருவெறுப்பான மோதல்: சரத்குமார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மதுரை, புதுக்கோட்டை போன்ற பல இடங்களில் அதிமுகவினரும், தேமுதிகவினரும் மோதிக் கொண்டனர். நெறிபிறழா நேர்மையையும், வன்முறையற்ற அகிம்சை அரசியலையும் வருங்காலத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கு பதிலாக, நடுரோட்டில் உள்ளாடை தெரிய வேட்டியை உயர்த்தி கட்டிக் கொண்டு, கல்லெறி போர் நடத்தி, கழிசடை ஆபாச வசன யுத்தம் நடத்தியதைப் பார்த்த மக்களிடையே அரசியல்வாதிகள் மீது அருவெறுப்பை உருவாக்கியிருக்கிறது.
மறைந்த எம்.ஜி.ஆரின் சிலையில் யார் கொடியைப் பறக்க விடுவது என போட்டி போட்டுக் கொண்டு வன்முறையை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை கெடுத்திருக்கிறார்கள். இவர்களது செயல் நகைப்புக்குகிடமாகி உள்ளது.
எம்.ஜி.ஆர் நினைவு நாளில் அமைதியாக ஊர்வலங்கள் நடத்தி பிறருக்கு முன்னோடியாக நடந்து கொண்ட நம் இயக்கத் தொண்டர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்லவற்றைச் சொல்லிச் சென்ற தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு முன்னால் கட்டிப்புரண்டு சண்டைபோடும் அநாகரீக அரசியல், வருங்காலத்தில் தொடராமல் இருக்க அனைத்துக் கட்சி தலைவர்களும் உறுதியேற்று தொண்டர்களை வழிநடத்த வேண்டும்.
இவ்வாறு சரத்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.