பாவூர்சத்திரம்-வாந்தி,பேதியால் நூற்றுக்கனக்கானோர் பாதிப்பு
பாவூர்சத்திரம்: கலங்கலான குடிநீரை குடித்ததால் பாவூர்சத்திரம் அருகே 100க்கும் மேற்பட்டோர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவூடையனூர், மாடியனூர், பொடியனூர், சின்னநாடானூர், கோட்டைவிளையூர், ராயாப்பநாடானூர் ஆகிய ஊர்களில் வாந்தி மற்றும் பேதி காரணமாக 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆவுடையனூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் அந்த ஊரைச் சேர்ந்த செல்வி, மாரிச்செல்வி, அரிதாஸ், பாலகன், திலகா, சுதா, ஜெயராணி ஆகியோரும் பொடியனூரை சேர்ந்த செல்லக்கனி, கோட்டைவிளையூரை சேர்ந்த ஜெயராஜ், சுடலைமணி நாடார் மற்றும் மாடியனூரை சேர்ந்த தங்கராஜா உள்பட பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு தாமிராபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் விநியோகிக்கப்ட்டு வருகிறது. குடிநீரால் தான் வாந்தி, மற்றும் வயிற்றுபோக்கு ஏற்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் சிகிக்சை பெறுவோர் கூறியதாவது, தாமிராபரணி தண்ணீர் கலங்கலாக வருகிறது. குடத்தில் தண்ணீர் பிடித்து வைத்தால் அடியில் மண் உறைகிறது. இந்த தண்ணீரால் தான் இப்பகுதியில் வாந்தி, பேதி பரவுகிறது என்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications