பெனாசிரை நாங்கள் முஷாரப் அரசுதான் கொன்றது: அல் கொய்தா

ராவல்பிண்டி அருகே 27ம் தேதி இரவு பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் இறந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அடுத்த நாள் பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சீமா செய்தியாளர்களிடம் பேசுகையில், பெனாசிர் பூட்டோவை நோக்கி ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டான். அப்போது மனித வெடிகுண்டும் வெடித்தது.
இந்த அதிர்ச்சி அலைகள் பெனாசிரைத் தாக்கியதால், உயிர் தப்புதவற்காக அவர் வேகமாக வேனுக்குள் குணிந்தார். அப்போது வேனின் மேற்கூரை கம்பி தலையில் பலமாக இடித்ததில் அவர் மரணமடைந்தார் என்று கூறினார். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
மேலும் இந்த சம்பவத்திற்கு அல் கொய்தா அமைப்புதான் காரணம் என்றும் கூறிய சீமா அதுதொடர்பான அல் கொய்தா அமைப்பினரின் தொலைபேசி உரையாடலையும் வெளியிட்டார். இக்ரமுல்லா, பிலால் ஆகிய இருவரே பெனாசிரைக் கொன்றவர்கள் என்றும் கொலைச் சம்பவத்திற்குப் பின்னர் அல் கொய்தா அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான பைதுல்லா மசூத்துடன் அல் கொய்தா தீவிரவாதி ஒருவர் உரையாடியதும் அதில் இருந்தது.
முஷாரப் அரசே காரணம்:
இந்த நிலையில் நேற்று அல் கொய்தா அமைப்பு இந்த கூற்றை மறுத்தது. முஷாரப் அரசுதான் பெனாசிர் சாவுக்குக் காரணம் என்று அல் கொய்தா அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மசூத்தின் உதவியாளரான மெளலவி மெளலானா உமர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பாகிஸ்தான் தலைவர்கள் யார் மீதும் நாங்கள் தனிப்பட்ட முறையில் விரோதம் கொண்டிருக்கவில்லை. அவர்களை எதிரிகளாகவும் கருதியதில்லை.
எங்களது ஒரே எதிரி அமெரிக்கா மட்டுமே. பாகிஸ்தான் தலைவர்களைக் கொல்ல நாங்கள் ஒருபோதும் திட்டமிட்டதில்லை.
பெனாசிரை நாங்கள் கொல்லவில்லை. அதிலும் ஒரு பெண்ணை கொல்வதற்கு இஸ்லாமிய பழங்குடியின சமுதாயமும், பாரம்பரியமும், கலாச்சாரமும் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.
பெனாசிர் கொலை தொடர்பாக மெளலவி மசூத்துடன், அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பேசியதாகவும், அதை தாங்கள் ஒட்டுக் கேட்டதாகவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது கட்டுக்கதையாகும்.
அவர்களது தவறை மறைக்க எங்கள் மீது குற்றம் சாட்டப் பார்க்கிறார்கள். இது முழுக்க முழுக்க பாகிஸ்தான் அரசு, முஷாரப் அரசு செய்த செயலாகும்.
பெனாசிர் பூட்டோ பாகிஸ்தான் தலைவர் மட்டுமல்ல, சர்வதேசப் புகழ் பெற்ற ஒரு உலகத் தலைவர் ஆவார். அவரது பாதுகாப்பு வளையத்திற்குள் ஊடுறுவுவது என்பது சாதாரண விஷயமல்ல. எனவே இதில் அரசு மட்டுமே நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளது.
பெனாசிர் மறைவுக்கு அல் கொய்தா சார்பில் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார் உமர்.
அல் கொய்தா அமைப்பின் இந்த திடீர் மறுப்பால் பெனாசிர் மரணம் எப்படி நடந்தது, யாரால் நிகழ்த்தப்பட்டது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சுட்டுத்தான் கொல்லப்பட்டார் - பெனாசிர் உதவியாளர்
இதற்கிடையே, பெனாசிர் பூட்டோ சுட்டுத் தான் கொல்லப்பட்டார். அவரது தலையின் பின்புறம் குண்டு பாய்ந்து, முன்புற வழியாக துளைத்துச் சென்ற அடையாளத்தை நான் பார்த்தேன் என்று பெனாசிர் பூட்டோவின் உதவியாளரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான ஷெர்ரி ரஹ்மான் கூறியுள்ளதால் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.
பெனாசிருடன் எப்போதும் கூடவே இருப்பவர் ஷெர்ரி. சம்பவ நாளன்றும் அவர் பெனாசிரின் காரில்தான் இருந்தார். நடந்தது என்ன என்று அவர் கூறுகையில், சம்பவத்தின்போது நான் காரில்தான் இருந்தேன். அப்போது சில அடையாளம் தெரியாத நபர்கள் என்னை சுற்றி நின்று கொண்டனர். இதனால் காருக்குள் நின்றபடி மேலே தொண்டர்களை நோக்கி பெனாசிர் கையாட்டிக் கொண்டிருந்தபோது என்ன நடந்தது என்று எனக்கு சரியாக தெரியவில்லை. மேலும் கொலையாளியின் முகமும் எனக்குத் தெரியவில்லை.
துப்பாக்கியால்தான் முதலில் சுட்டனர். பிறகுதான் குண்டு வெடித்தது. அப்போது நான் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டேன். எனது காலில் காயம் ஏற்பட்டது. பிறகு எனது காரில்தான் பெனாசிரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.
பெனாசிர் மரணத்திற்குப் பின்னர் அவரது உடல் மத வழக்கப்படி குளிப்பாட்டப்பட்டது. நானும் அப்போது உடன் இருந்து குளிப்பாட்டுவதற்கு உதவினேன்.
அவரது வயிற்றில் எந்தக் காயமும் இல்லை. ஆனால் தலையில் பெரிய குண்டுக்காயம் இருந்தது. அதாவது தலையின் பின்னால் பாய்ந்த கண்டு முன்புறம் வழியாக வெளியே பாய்ந்திருந்தது.
குண்டு பாய்ந்ததால் ஏற்பட்ட ரத்தப் பெருக்கு நிற்காமல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அதிக ரத்தம் வெளியாகியதும் பெனாசிரின் மரணத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
உண்மை இப்படி இருக்க, பெனாசிர் கார் மேற் கூரைக் கம்பி இடித்து இறந்ததாக பாகிஸ்தான் அரசு கூறுவது மிகவும் மோசமான கற்பனை, கேலிக்கூத்தாகும். முட்டாள்தனமான இந்த கூற்றைப் பார்க்கும்போது அவர்கள் உண்மையை மூடி மறைக்க முயற்சிப்பதாக தெரிகிறது என்று கூறினார் ஷெர்ரி.
இப்படி மாறி மாறி குழப்பங்கள் தொடர்வதால் பெனாசிர் உண்மையில் எப்படி இறந்தார் என்பதற்கு இன்னும் விடை கிடைக்காத நிலை உள்ளது.












Click it and Unblock the Notifications