சென்னையில் மாயாவதி கூட்டம் - தொண்டர்கள் வெள்ளம்
சென்னை: பிற்பட்ட வகுப்பினர், நலிவடைந்த சமுதாயத்தினர் மற்றும் ஏழைகளை காங்கிரஸும், பாஜகவும் புறக்கணித்து வருவதாக உ.பி. முதல்வர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் நேற்று இரவு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சகோதரத்துவ மாநாடு நடந்தது. நாடு முழுவதும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாக பிற்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மையினரைத் திரட்டும் வகையில் பல்வேறு மாநிலங்களுக்கும் செல்ல மாயாவதி திட்டமிட்டுள்ளார்.
இதன் ஒரு கட்டமாக நேற்று சென்னையில் பகுஜன் சமாஜ் சார்பில் சகோதரத்துவ மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் கலந்து கொண்டு மாயாவதி பேசுகையில், முன்பு பாஜக தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும், இப்போது காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், பிற பிராந்திய கட்சிகளும், பொருளாதார ரீதியில் பிற்பட்ட நிலையில் உள்ளவர்களை கண்டுகொள்ளவில்லை. புறக்கணிப்பு மணப்பான்மையுடனேயே நடந்து கொள்கின்றன.
பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பணவீக்கம் அதிகரித்ததால், நடுத்தர வகுப்பினரும், ஏழைகளும் கடும் பாதிப்புக்குள்ளாகினர். எனவே மத்தியிலும், மாநிலங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சியால் மட்டுமே மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும்.
பிற கட்சிகளைப் போல தொழிலதிபர்களுக்கான கட்சி அல்ல பகுஜன் சமாஜ் கட்சி. அதிகார வெறி பிடித்தவர்களுக்கான கட்சி அல்ல. பண பலத்தை நாங்கள் நம்பி தேர்தல்களை சந்திப்பதில்லை. உ.பியில் 4வது முறையாக மக்கள் ஆதரவுடன், மக்களுக்கான கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றியுடன் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.
பொதுத்துறையில் உள்ளதைப் போலவே உ.பியில் தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை நாங்கள் அமல்படுத்தியுள்ளோம். மத்தியிலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை நாடு முழுவதும் அமல்படுத்துவோம். நாட்டின் தலை விதியையே மாற்றி அமைப்போம்.
முஸ்லீம்களுக்கு எனது அரசு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதேபோல மத்தியில் ஆட்சிக்கு வந்தால், மேல் தட்டில் உள்ள பிற்பட்ட, ஏழை பிரிவினருக்கும் அனைத்து மாநிலங்களிலும் இட ஒதுக்கீடு அளிப்போம்.
சாதி, மதம், மொழிப் பாகுபாடு இல்லாத சமுதாயம் உருவாக பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும்.
மத்தியில் அடுத்து வரும் ஆட்சிக்கு நான் தலைமை தாங்க விரும்புகிறேன். டெல்லியில் உள்ள திராவிடக் கட்சிகளின் வாக்குகளை என்னால் பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் மாயாவதி.
பெரும் கூட்டம்:
மாயாவதி தலைமையில் நடந்த இந்த மாநாட்டுக்கு அலை கடலென தொண்டர்கள் திரண்டு வந்திருந்தது அனைவரையும் வியப்படையச் செய்தது. இதுவரை தமிழக கட்சிகளுக்கு மட்டுமே அதிலும் திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சிகளுக்கு மட்டுமே இப்படிப்பட்ட கூட்டம் கூடியதை சென்னை மக்கள் பார்த்திருந்ததால், மாயாவதியின் கூட்டத்திற்கு வந்த கூட்டம் அவர்களை ஆச்சரியப்படுத்தியது.
அதேசமயம், இந்த மாநாட்டுக்காக உ.பியிலிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ரயில்களில் இலவச சவாரி செய்து வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலும் பகுஜன் சமாஜ் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் மாயாவதியின் இந்தக் கூட்டம் அமைந்திருந்தது. இது எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.