கூடுதல் விலைக்கு மது விற்ற 200 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்
சென்னை: டாஸ்மாக மதுக்கடைகளில் மதுவை கூடுதல் விலைக்கு விற்ற சர்ச்சையில் சிக்கிய 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 8 பேரை டிஸ்மிஸ் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தமிழக அரசு பீர், பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களுக்கு 5 ரூபாய் அளவுக்கு விலையை உயர்த்தியது. விலையை உயர்த்தியது அரசுக்கு லாபமோ இல்லையோ, டாஸ்மாக் மதுக்கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களின் காட்டில் அதிர்ஷ்ட மழை கொட்டியது.
அரசு விலை 5 ரூபாய்தான் உயர்த்தியது. ஆனால் பல கடைகளில் ஊழியர்கள், 20 ரூபாய் வரை விலையை அதிகமாக வைத்து விறபனை செய்து வருகின்றனர். மேலும் புத்தாண்டையொட்டி நடந்த விற்பனையின்போது இந்த விலை உயர்வு 50 ரூபாய் வரை இருந்ததாம்.
இந்த அநியாய விலை குறித்து மதுபான பிரியர்களிடமிருந்து ஏராளமான புகார்கள் டாஸ்மாக் அதிகாரிகளுக்குப் பறந்தது.
இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் நடத்திய அதிரடி சோதனையில் அரசு நிர்ணயித்த விலையைவிட அதிக விலைக்கு விற்ற டாஸ்மாக் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என 212 பேர் பிடிபட்டனர். அவர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
8 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யவும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மங்கத்ராம் சர்மா நடவடிக்கை எடுத்துள்ளார்.
அரசு மதுக்கடைகளில் விலை உயர்வு, கலப்படம், வெளிமாநில சரக்குகள் விற்பனை, போலிமது ஆகியவை குறித்து மக்கள் 044-28542303 என்ற எண்ணுக்கு புகார் செய்யலாம் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.