மைசூர் மல்லிகைக்கு காப்புரிமை!!
இந்த வகை மல்லிகைப் பூக்களை உள்ளூரில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பயிரிட காப்புரிமை தரப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மட்டுமல்லாது உலக அளவிலும் மிகவும் புகழ் பெற்றவை இந்த மூன்று வகை மல்லிகைப் பூக்களும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பூக்களுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளதால், வர்த்தக ரீதியில் இந்த மல்லிகை மலர்களுக்கு நல்ல விலை கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. மேலும் உள்ளூர் மல்லிகை உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மூன்று வகை மல்லிகை மலர்களோடு, மைசூர் வெற்றிலை, நஞ்சன்கூடு வாழைப்பழம் ஆகியவற்றுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில தோட்டக்கலைத்துறை இயக்குநர் ராமகிருஷ்ணப்பா கூறியுள்ளார். அறிவு சொத்துரிமை சட்டத்தின் கீழ் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
ராமகிருஷ்ணப்பா தொடர்ந்து கூறுகையில், மொத்தம் 10 வகை தாவரங்கள் அறிவுச் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 6 வகை தாவரங்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவை என்றார் அவர்.
கர்நாடகத்தில் மொத்தம் 411 தோட்டக் கலைப் பண்ணைகள் உள்ளன. இந்த வகை அரிய தாவரங்களை மாநிலம் முழுவதும் பயிரிட கர்நாடக தோட்டக்கலைத் துறை ஊக்கப்படுத்துகிறது. பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது.
மைசூர் மல்லிகை பொதுவாக மைசூர் மற்றும் அதன் சுற்றுப் புறங்களில்தான் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டனா தாலுகாவிலும் மைசூர் மல்லிகை அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
மிகவும் நறுமணத்துடன் கூடியதாக இருப்பதால் மைசூர் மல்லிகைக்கு பெரும் கிராக்கியும், நல்ல பெயரும் உள்ளது. உடுப்பி, ஹாதகள்ளி ஆகிய பகுதிகளிலும் கூட மைசூர் மல்லிகை கணிசமான அளவுக்குப் பயிரிடப்படுகிறது.
ஹாதகள்ளி மல்லிகைக்கு வாசனை மல்லிகை என்ற பெயரும் உண்டு. ஹூவின ஹாதகள்ளி பகுதியில்தான் இது அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்தப் பகுதி பெல்லாரி மாவட்டத்தில் உள்ளது.
இந்த மூன்று வகை மல்லிகையில் உடுப்பி மல்லிகைதான் ஜூனியர். உடுப்பி மாவட்டம் சங்கராபுரா பகுதியில்தான் முதன் முதலில் இந்த வகை மல்லிகை 100 ஆண்டுகளுக்கு முன்பு பயிரிடப்பட்டது. ஆனால் சமீப காலமாகத்தான் இது பிரபலமாகி வருகிறது.
உடுப்பி மல்லிகைக்கு கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகள், மும்பையில் நல்ல கிராக்கி உள்ளதாம்.
மதுரை மல்லிக்கும் காப்புரிமை கிடைக்குமா??