அதிமுக செயற்குழு கூடியது-பண்ருட்டி குறித்து வதந்தி
சென்னை: முக்கிய அரசியல் சூழலின் பின்னணியில் அதிமுக செயற்குழுக் கூட்டம் இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் கூடியது.
சட்டசபைத் தேர்தல் தோல்வியின் பின்னணியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடியது.
அதன் பின்னர் கிட்டத்தட்ட 11 மாத இடைவெளிக்குப் பின்னர் இன்று மாலை 4 மணிக்கு ஜெயலலிதா தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் கூடியது.
இந்த செயற்குழுக் கூட்டத்திற்கு ஜெயலலிதா தலைமை தாங்க, அவைத் தலைவர் மதுசூதனன் முன்னிலை வகித்தார்.
கட்சியின் பொருளார் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன் உட்பட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெறவிருக்கும் செயற்குழு கூட்டத்தில் அதிமுக தலைமை பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பண்ருட்டி இணைவதாக வதந்தி:
இதற்கிடையே இன்று பண்ருட்டி ராமச்சந்திரன் குறித்து ஒரு வதந்தி பரவியது. தேமுதிகவை விட்டு விலகி அவர் இன்று அதிமுகவில் இணையப் போவதாக செய்திகள் பரவின.
இது திமுக தரப்பில் இருந்து கிளப்பப்படும் வதந்தி என தேமுதிகவினர் தெரிவித்தனர்.