புலிகள் மீது கட்டுக்கதை சுமத்துகிறார்கள்-திருமாவளவன்
சென்னை: தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஒரு உறுப்பினரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொனறார்கள் என்னும் கட்டுக்கதை மிகவும் வேடிக்கையாக இருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி கோவிலுக்கு வழிபாடு செய்யச் சென்ற கொழும்பு மாவட்டத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் கொடூரமான முறையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
அவர் ரனில் விகரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக இருந்தாலும், தமிழீழ ஆதரவாளராக குரல் எழுப்பி வந்தார். அதனால் அந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே, சிங்கள இனவெறிக் கும்பலால் அவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.
எனினும், கடுமையான சிகிச்சைக்குப் பின உயிர் தப்பினார். அதன் பின்னரும் கொலை வெறிக் கும்பல் அவரை பின் தொடர்ந்து சுட்டுக் கொலை செய்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் சிங்களப் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக தொடர்ந்து போர்க்குரல் எழுப்பி வந்தார். அதனால் தான் அவர் கொல்லப்பட்டிருக்கிறார்.
மகேஸ்வரன் தமிழர் என்பதனால் மட்டுமே இனவெறி கொண்டு இந்த படுகொலையை செய்துள்ளனர்.
மேலும் இதனை திசை திருப்புவதற்காக இந்தப் படுகொலையில் விடுதலைப் புலிகளை இணைத்து வதந்திகளை பரப்புகிறார்கள். தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் ஒரு உறுப்பினரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றார்கள் என்ற கட்டுக்கதை மிகவும் வேடிக்கையாக உள்ளது.
ஏற்கனவே தேவாலயத்தில் வழிபடச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜ சிங்கத்தை சிங்கள இனவெறிக் கும்பல் சுட்டுக் கொன்றது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இந்த நிலை என்றால், சாதாரண தமிழ் குடிமக்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை சர்வதேச சமூகம் உணர வேண்டும். குறிப்பாக இந்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆகவே இந்தியப் பேரரசு, ஈழத்தமிழர் சிக்கலில் சிங்கள அரசுக்குத் துணை போகாமல் அவர்களை எச்சரித்து இத்தகைய போக்குகள் தொடர்வதை நிறுத்த வேண்டும். சிங்களப் பேரினவாதக் கும்பலின் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது என்று கூறியுள்ளார் திருமாவளவன்.