டெல்கி மீதான போலி முத்திரைத்தாள் வழக்கு: ஜன. 30ல் தீர்ப்பு
சென்னை: அப்துல் கரீம் டெல்கி உள்ளிட்டோர் மீதான போலி முத்திரைத்தாள் வழக்கில் வருகிற ஜனவரி 30-ந் தேதிக்கு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டெல்கி உட்பட 5 பேருக்கான தண்டனை விவரத்தை அன்றைய தினம் தெரிவிப்பதாக சிபிஐ சிறப்பு நீதிபதி கூறினார்.
நாட்டையே உலுக்கிய பல ஆயிரம் கோடி முத்திரைத்தாள் மோசடி வழக்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் தமிழகத்தில் நடந்த முத்திரைத்தாள் மோசடி குறித்து விசாரித்த சிபிஐ, அப்துல் கரீம் டெல்கி, அப்துல் வாஹித், முன்னாள் டிஐஜி முகமது அலி, எல்.ஐ.சி அதிகாரி ராமசாமி சாஹு உள்ளிட்ட 11 பேர் மீது சென்னை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
அப்போது சர்பிராஸ் நவாஸ் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, அவருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ கோர்ட் நீதிபதி வேலு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று (ஜனவரி 2) விசாரணைக்கு வந்தது. அப்போது புனே, எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்கி, அப்துல் வாஹித், ஜேக்கப் சாக்கோ ஆகியோருடனும், பெங்களூர் சிறையில் உள்ள பாலாஜியுடனும் நீதிபதி வேலு வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தினார்.
மேலும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகமது அலி, முன்னாள் காவல்துறை உதவி ஆணையர் சங்கர், ராமசாமி சாது, நிஜாமுதீன், அவரது மனைவி நஸ்ரின், பீட்டர் கென்னடி ஆகியோர் நீதிபதி முன் நேரில் ஆஜரானார்கள்.
முக்கிய குற்றவாளிகளான டெல்கி, அப்துல் வாஹித், ஜேக்கப் சாக்கோ மற்றும் பாலாஜி, பீட்டர் கென்னடி ஆகிய 5 பேரும் குற்றத்தை ஒப்புக் கொள்வதாக நீதிபதி வேலுவிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து 5 பேரையும் வழக்கிலிருந்து தனியாக பிரித்து புதிய வழக்காக நீதிபதி பதிவு செய்தார்.
இந்த 5 பேருக்கான தண்டனை விவரத்தை ஜனவரி 30-ந் தேதி தெரிவிப்பதாக நீதிபதி அறிவித்தார். தொடர்ந்து வழக்கு விசாரணை 30-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications