பாஜகவுடன் ஜெ. நெருக்கம்: அதிமுக கூட்டணியிலிருந்து தேசிய லீக் விலகல்
சென்னை: பாஜகவுடன் ஜெயலலிதா நெருங்கி வருவதால் அதிமுக கூட்டணியில் இருந்து இந்திய தேசிய லீக் விலகியுள்ளது.
இது குறித்து இந்திய தேசிய லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் முகம்மத் சுலைமான் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய தேசிய லீக், தமிழ் மாநில அமைப்பு கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. தலைவராக இருந்த பஷீர் அகமது, பொதுச் செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் ஜவஹர் அலி ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவர்கள் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
புதிய தலைவராக சையத் இனாயத்துல்லா, பொதுச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன், பொருளாளராக ஜாகிருதீன் அகமத், செயலாளர்களாக ஷகீல் அகமத், முனீருதீன் ஆகிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு ஜெயலலிதா வாழ்த்து அனுப்பி உள்ளார். அதோடு அவரை விருந்துக்கும் அழைத்துள்ளார். மேலும் பாஜகவுடன் அதிமுக நெருங்கி வருகிறது. இதனால் அதிமுக கூட்டணியை விட்டு விலகுகிறோம்.
தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை மனதார வரவேற்கிறோம் என்றார் சுலைமான்.