சிமென்ட்: பாமக போராட்டம் வாபஸ் - முதல்வருக்கு ராமதாஸ் பாராட்டு
சென்னை: பொதுமக்கள் வசதிக்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் சிமென்ட் விற்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளார். பாமக சார்பில் 7ம் தேதி நடத்தவிருந்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரசு சிமென்ட்டை இறக்குமதி செய்து, அதை மக்களுக்கு அடக்க விலையில் கொடுக்க வந்துள்ளது. எனவே சிமென்ட் விலையை குறைக்கக் கோரி போராட்டம் நடத்துவது தேவையற்றது. எனவே பாமகவின் 7ம் தேதி போராட்டம் கைவிடப்படுகிறது.
சிமென்ட் நிறுவனங்கள், விலையைக் குறைக்க முன்வராவிட்டால் அவற்றை நாட்டுடமையாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் ஒருபோதும் சிமென்ட் உற்பத்தியாளர்கள் விலையைக் குறைக்க முன்வர மாட்டார்கள். அரசுதான் தானாக முன்வந்து தேசியமயமாக்கும் வேலையைச் செய்ய வேண்டும். இதற்கு அரசு தயங்கக் கூடாது.
முதல் கட்டமாக, தாங்கள் தயாரிக்கும் சிமென்ட்டில் ஒரு பகுதியை பொது விநியோகத்திற்காக அரசுக்கு வழங்க வேண்டும் என தனியார் சிமென்ட் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும்.
விலை உயர்வைத் தடுக்கவும், தங்கு தடையின்றி கிடைப்பதற்காகவும் எப்படி அரசு அரிசியை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்கிறதோ, அதேபோல, சிமென்ட்டையும் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications