பீதியில் 3,200 அரசு ஊழியர்கள்
திருநெல்வேலி: தமிழக அரசால் பணியில் அமர்த்தப்பட்ட 3,200 ஊழியர்கள் வேலை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அரசுப் பணிக்கு புதிய பணியாளர்களை தேர்வு செய்ய பணி நியமன தடை சடடம் கொண்டு வரப்பட்டது. இதனால் அரசு பணிக்கு புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை.
பின்னர் கடந்த 2006ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி அரசு பணிகளில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன் பணி நியமன தடை சட்டத்தை ரத்து செய்தார். பின்னர் படிப்படியாக காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் என உறுதி அளித்தார்.
இதையடுத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தலைமை செயலகம், டிஎன்பிஎஸ்சியில் உதவியாளர் பணி மற்றும் வி.ஏ.ஓ ஆகிய பணிகளுக்கு புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதே போல் கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அமைச்சுகப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சக பணி ஆகிய துறைகளில் நிரந்தரமாக இருந்த காலி இடங்களுக்கு தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடைப்படையில் நியமிக்கப்பட்டனர்.
இந்த பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் சுமார் 3,200 ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்காலிக பணி என்று பணி உத்தரவு வழங்கப்பட்டாலும், அரசு ஊழியர்களுக்கான கால முறை ஊதியம், விடுப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் இந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன. இதில் பலர் 50 வயதை கடந்தவர்கள்.
இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு மூலம் அரசுத் துறைகளில் காலியாக உள்ள தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கு 3,875 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஜனவரி 27ம் தேதி நடக்கவுள்ள இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் 40,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முலம் புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டால் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் முலம் தற்காலிகமாக பணியில் அமர்த்தப்பட்ட தங்களின் வேலை வாய்ப்பு பறிபோய் விடுமோ என்று பணியாற்றி வரும் 3,200 ஊழியர்களும் கடும் பீதியில் உள்ளனர்.