ஆஸ்திரேலிய தீ விபத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மேற்கு மெல்போர்ன் மாவட்டத்தில் இன்று காலை நடந்த பயங்கர தீவிபத்தில் 3 இந்திய மாணவர்கள் தீயில் கருகி பலியானார்கள்.
பூட்ஸ்க்ரே என்ற இடத்தில் இந்த தீவிபத்து நடந்துள்ளது. இப்பகுதியில் இந்திய மாணவர்கள் வீடு ஒன்றில் தங்கிப் படித்து வருகின்றனர்.
இன்று காலை அந்த வீட்டில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. தீ மளமளவென பரவியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காணப்பட்டது.
உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயில் சிக்கித் தவித்த ஒரு ஆண், அவரது மனைவி, அவர்களது மகள் ஆகியோரை உயிருடன் மீட்டனர். ஆனால் 3 பேர் மட்டும் தீயில் சிக்கி கருகி விட்டனர். அவர்களுக்கு முறையே 30, 24, 22 என வயது இருக்கும்.
இறந்த மூன்று பேரில் இருவரின் உடல் வீட்டின் பின் பகுதியில் கருகிய நிலையில் காணப்பட்டது. இன்னொருவரின் உடல் வீட்டின் ஹால் பகுதியில் கிடந்தது.
இறந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் ஆஸ்திரேலிய காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.