திமுக அலுவலகம் முன்பு இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்!
கரூர்: திமுக தலைமை கழக பேச்சாளர் கணேசனை கண்டித்து கரூரில் திமுக அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
கரூர் வெங்கமேடு அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகனத்தில் வந்த இருவர் மோதிக் கொண்டனர். அதில், ஒருவருக்கு இந்திய கம்யூனிட் கட்சி இனாம் கரூர் நகர செயலாளர் சக்திவேலும், மற்றொருவருக்கு திமுக தலைமை கழக பேச்சாளர் கரூர் கணேசனும் சிபாரிசுக்கு சென்றனர்.
அப்போது அவர்கள் இருவருக்குமிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இந் நிலையில் திமுக பேச்சாளர் கணேசனுக்கு ஆதரவாக சுமார் 30 பேர் திரண்டு வந்து இந்திய கம்யூனிட் கட்சியை சேர்ந்த சக்திவேலுவை தாக்கியுள்ளனர்.
மேலும் இந்திய கம்யூனிட் கட்சியை இழுவாகவும் பேசியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.
இந்த விவகாரம் காவல் நிலையத்துக்கு சென்றபோது அங்கும் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந் நிலையில் இந்திய கம்யூனிட் கட்சியினர் திமுக பேச்சாளர் கணேசனை கைது செய்யக் கோரி இன்று காலை வெங்கமேட்டில் உள்ள இனாம் கரூர் நகர திமுக அலுவலகம் முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிபிஐ மாவட்டச் செயலாளர் ரத்தினம் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. இதனால் மீண்டும் இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.