மும்பை: 14 பேர் அடையாளம் கண்டுபிடிப்பு
மும்பை: மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 2 பெண்களிடம் செக்ஸ் வக்கிரத்துடன் நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்ட 14 பேரையும் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் புகைப்படக் கலைஞர்கள் அடையாளம் காட்டினர்.
டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு, மும்பையின் ஜூஹு பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் முன்பு நடந்து வந்து கொண்டிருந்த இரு வெளிநாடு வாழ் இந்தியப் பெண்களை சூழ்ந்த 80 பேர் கொண்ட கும்பல் செக்ஸ் வக்கிரத்துடன் நடந்து கொண்டது.
அந்த இரு பெண்களையும் அசிங்கப்படுத்திய அக்கும்பல் ஒரு பெண்ணின் உடையையும் கிழித்து மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டது.
இதை நேரில் பார்த்த இந்துஸ்தான் நாளிதழ் பத்திரிகையின் புகைப்படக் கலைஞர்கள் சதீஷ் படே, பிரசாத் கோரே ஆகியோர் புகைப்படம் எடுத்தனர். மேலும் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதுதொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அடையாளம் காட்டும் அணிவகுப்பு பரேட் நேற்று நடந்தது.
இரு புகைப்படக் கலைஞர்களும் அவர்களை போலீஸாரிடம் அடையாளம் காட்டினர். இந்த அணிவகுப்பின்போது மேலும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அமர்ஜித் சிங் உள்ளிட்ட 3 சாட்சியங்களும் கலந்து கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காட்டினர்.
ஆர்தர் ரோடு சிறையில் இந்த அடையாள அணிவகுப்பு நடந்தது.