தற்கொலை நகராகும் திருச்செந்தூர்
திருச்செந்தூர்: முருகனின் தலமான திருச்செந்தூரில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்கொலை நகரம் என்ற பெயரெடுக்க ஆரம்பித்துள்ளது திருச்செந்தூர்.
அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு என்ற பெருமைக்குரிய தலம் திருச்செந்தூர். இந்த புண்ணிய தலத்தில் மன விரக்தியால் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
சமூக மாற்றங்கள், மற்றும் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றால் தனி மனிதன் கடும் பாதிப்புக்குள்ளாகிறான். பிரச்சனைகளை எதிர்த்து போராடும் ஆற்றல் இல்லாதவர்கள் இறுதியில் தங்கள் வாழ்க்கையை மாய்த்து கொள்ள துணிகின்றனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தை சேர்ந்த பலரும் இதற்கு தேர்ந்தெடுக்கும் இடம் திருச்செந்தூர் என்பது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.
கடந்த வருடத்தில் மட்டும் திருச்செந்தூர் சரகத்தில் 94 பேர் தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள்.
பிரச்சனைகளில் சிக்கி மீள முடியாமல் தற்கொலை செய்ய முடிவெடுப்பவர்களில் சிலர் திருச்செந்தூர் வருகின்றனர். தனியார் லாட்ஜ் மற்றும் கடற்கரைக்கு பகுதிக்கு சென்று விஷம் குடித்தோ அல்லது தூக்கில் தொங்கியோ தங்கள் உயிரை மாய்க்கின்றனர்.
இதுபோன்ற தற்கொலைகளை தடுக்க காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். விடுதிகளில் தங்கியிருப்போர் மீதான கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். விடுதிகளில் கவுன்சிலிங் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications