சேது திட்டத்தை சிதைக்க அதிமுக-பாஜக கூட்டணி- மார்க்சிஸ்ட்
மதுரை: வகுப்புவாத பாஜகவுடன் சேர்ந்து சேது சமுத்திரத் திட்டத்தை சிதைக்க அதிமுக முயன்று வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை கோவையில் நடக்கிறது. இந்த மாநாட்டில் 35 நாடுகளை சேர்ந்த கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
மதுரையில் நாளை (8ம் தேதி) துவங்கி 10ம் தேதி வரை தமிழ் மாநில மாநாடு நடக்கிறது. மதுரை, கோவையில் நடத்தப்படும் இந்த மாநாடுகளில் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும், பாஜக, காங்கிரஸ் அல்லாத ஒரு மாற்று அணி தேவை என்பதையும் மார்க்சிஸ்ட் கட்சி முன் வைத்து விவாதிக்கும்.
வகுப்புவாத சக்தியுடன் சேர்ந்து சேது சமுத்திரத் திட்டத்தை சிதைக்க அதிமுக உறுதி கொண்டுள்ளது. பாஜகவை நோக்கி அதிமுக நகர்ந்து கொண்டிருக்கிறது.
திமுக ஆட்சி மக்களுக்கு நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அரசின் சிறந்த செயல்களை வரவேற்போம். அதே நேரத்தில் தவறுகளை விமர்சிப்போம் என்றார் வரதராஜன்.