அமைச்சர் சுப.தங்கவேலனுக்கு கறுப்பு கொடி-அரசு விழா ரத்து
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இலவச வேட்டி, சேலை வழங்க வரும் தமிழக குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் சு.ப.தங்கவேலனுக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்ததால் அரசு விழா திடீரென ரத்து செய்யப்பட்டது.
முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூரில் இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா நடக்க இருந்தது. இதில் அமைச்சர் சு.ப.தங்கவேலன் கலந்து கொள்ள இருந்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.
ஆனால் பேரையூர் கிராம மக்கள் அமைச்சரை ஊருக்குள் வர விடமாட்டோம், அப்படி மீறி அவர் வந்தால் கறுப்பு கொடி காட்டுவோம் என கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் பரமக்குடி டி.எஸ்.பி. பெருமாள் தலைமையிலான போலீசார் சமரச பேச்சு நடத்தினர். ஆனால் பேரையூர் கிராம மக்கள் அமைச்சரை எதிர்ப்பதில் மிகவும் உறுதியாக இருந்ததால் விழா ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பேரையூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை இலவச கேஸ் அடுப்பு, டிவி மற்றும் இலவச நிலம் ஆகியவை வழங்கப்படவில்லை.
தற்போது வெறும் கண் துடைப்புக்காக இலவச வேட்டி, சேலை வழங்கி சமாதானப்படுத்த முயற்சி நடக்கிறது. அதனால் தான் அமைச்சரை ஊருக்குள் விட மறுக்கிறோம் என்றனர்.
மக்களின் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தால் அமைச்சர் பங்கேற்கவிருந்த அரசு விழா ரத்து செய்யப்பட்டது.