அமைச்சர் ராசா வீட்டு முன் போராட்டம்-பாமக அறிவிப்பு
அரியலூர்: பாமக செயலாளர் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறவேண்டும் என வலியுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பும், மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ராசா வீட்டு முன்பும் பாமக சார்பில் முற்றுக்கை போராட்டம் நடத்தப்படும் என்று வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு கூறியுள்ளார்.
பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அரியலூரில் நடந்தது. அப்போது வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குரு செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அரியலூரில் கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பாமக மாநாட்டுக்காக யாரையும் மிரட்டியோ, அச்சுறுத்தியோ பணம் வசூல் செய்யவில்லை. அப்படி ஏதாவது தகராறு ஏற்பட்டிருந்தால் மாநாடு முடிந்த பின்பு வழக்கு போட்டிருக்கலாம்.
அப்போது அரியலூர் மாவட்டம் பிரிக்கப்படவில்லை. ஆனால் அப்போது ரோடு ஒப்பந்ததாரரிடம் மிரட்டி பணம் கேட்டதாக கூறி தற்போதைய அரியலூர் கலெக்டர் சேவியர் நாயகத்திடம் புகார் கூறி பாமக மாவட்ட செயலாளர் வைத்தி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவர் மீது வழக்கு போட்டால் என்னை மிரட்டி விடலாம் என மத்திய அமைச்சர் ராசாவும், ஆண்டிமடம் எம்எல்ஏ சிவசங்கரனும் நினைக்கின்றனர். இதன் மூலம் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டால் அதற்கு அமைச்சர் ராசா தான் பொறுப்பு.
அமைச்சர் ராசாவின் ஏவலராக பெரம்பலூர் கலெக்டர் செயல்படுகிறார். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தவறான செயல்கள் நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன. அவரை 15 நாட்களுக்குள் இட மாற்றம் செய்ய வேண்டும்.
மேலும், பாமக செயலாளர் வைத்தி மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறவேண்டும் என வலியுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பும், கலெக்டரை தூண்டி விடும் அமைச்சர் ராசா வீட்டு முன்பும் பாமக சார்பில் முற்றுக்கை போராட்டம் நடத்தப்படும் என்றார் குரு.
அப்போது பாமக மாநில துணை பொதுச் செயலாளர் பாலு, மாட்ட செயலாளர் வைத்தி ஆகியோர் உடனிருந்தனர். வன்னியர் சங்க மாநில தலைவர் குருவின் இந்த எச்சரிக்கையால் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டப் பிரிப்பில் ராசாவுக்கும் குருவுக்கும் இடையே பெரும் பனிப் போர் நடந்தது நினைவுகூறத்தக்கது. முதல்வர் கருணாநிதிக்கு மிக நெருக்கமான ராசாவுடன் பாமக நிறுவனர் ராமதாசுக்கு மிக நெருக்கமான காடுவெட்டி குரு மோதலில் இறங்கியிருப்பது திமுக-பாமக இடையிலான மோதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவுள்ளது.