நெல்லை அருகே மாணவன் நரபலி - போலீஸில் புகார்
திருநெல்வேலி: நெல்லை அருகே 8ம் வகுப்பு மாணவன் நரபலி கொடுக்கப்பட்டதாக மந்திரவாதி மீது மாணவனின் தந்தை போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
நெல்லையை அடுத்த பேட்டை சுந்தர வினாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி. தள்ளுவண்டியில் வளையம் வியாபாரம் செய்து வரும் இவருக்கு முப்புடாதி என்ற மனைவியும் வெற்றி வேல், மாரியப்பன், கோமதிசங்கர், விக்னேஷ் ஆகிய மகன்களும் உள்ளனர்.
வெற்றி வேல் அங்குள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 3-9-07 ஊருக்கு ஓதுக்குபுறமுள்ள ஒரு கிணற்றில் அவன் பிணமாக கிடந்தான். கால் கழுவச் சென்றபோது தவறி விழுந்து இறந்ததாக போலீசார் கூறினர்.
இதற்கிடையில் தன் மகன் சாவில் மர்மம் இருப்பதாகவும், வெற்றிவேல் மூத்த மகன் என்பதால் அருகில் உள்ள மந்திரவாதி ஒருவர் மாந்திரீக தொழிலுக்காக நரபலி கொடுத்துவிட்டதாகவும் மாடசாமி பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.