சிமென்ட் விலையைக் குறைக்க உற்பத்தியாளர்கள் சம்மதம்
சென்னை: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிமென்ட் விலையை குறைக்க சிமென்ட் உற்பத்தியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். மூடை ஒன்றுக்கு ரூ. 200 ஆக விலையைக் குறைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் முதல்வர் கருணாநிதியை சந்தித்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் சிமென்ட் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் வீடுகள் கட்டுவோர் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். கடன் வாங்கி வீடு கட்டுவோரின் நிலையை சொல்ல முடியாது, அந்த அளவுக்கு மகா மோசமாக இருந்தது.
சிமென்ட் விலையைக் குறைக்கக் கோரி பாமக பல கட்டமாக போராடியது. இந்த நிலையில் சிமென்ட் ஆலை அதிபர்கள் தாங்களாக முன்வந்து சிமென்ட் விலையைக் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது ஆலைகளை அரசு கையகப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து சிமென்ட் உற்பத்தியாளர்கள் சார்பில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன அதிபர் என்.சீனிவாசன் கடந்த 7ம் தேதி முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
பின்னர் தனியார் சிமென்ட் உற்பத்தியாளர்களுடன் பேசி நல்ல முடிவுடன் வருவதாக கூறி விட்டுச் சென்றார்.
அதன்படி தனியார் சிமென்ட் நிறுவன அதிபர்கள் கூடிப் பேசினர். இதைத் தொடர்ந்து இன்று சீனிவாசன் தலைமையில் சிமென்ட் உற்பத்தியாளர்கள் முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர்.
அப்போது சிமென்ட் விலையை மூடை ஒன்றுக்கு ரூ. 200 என குறைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். இதுதொடர்பான ஒப்புதல் கடிதத்தையும் அவர்கள் முதல்வரிடம் வழங்கினர்.
மேலும், மூடை ரூ. 200 என்ற விலையில் மாதம் 20 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்து தருவதாகவும் அவர்கள் முதல்வரிடம் உறுதியளித்துள்ளனர்.
தற்போது மூடை சிமென்ட் ரூ. 240 முதல் ரூ. 260 வரை விற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications