ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஆளுநர் சம்பளம் உயர்வு
டெல்லி: குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த சம்பள உயர்வு 2007ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுதொடர்பான மத்திய அரசின் முடிவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.
அதன்படி குடியரசுத் தலைவரின் சம்பளம் ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படுகிறது. துணை குடியரசுத் தலைவரின் ஊதியம் ரூ. 40 ஆயிரத்திலிருந்து ரூ. 85 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. ஆளுநர்களின் சம்பளம் ரூ. 36 ஆயிரத்திலிருந்து ரூ. 75 ஆயிரமாக உயருகிறது.
மேலும் ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவர்களுக்கான ஓய்வூதியம் ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 6 லட்சமாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய ஊயர்வுக்கு முன்னதாக எம்.பிக்களுக்கு மாதந்தோறும் ரூ. 68 ஆயிரம் வரை ஊதியம் மற்றும் பிற சலுகைகள் இருந்து வந்தன. இது குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், ஆளுநர்களின் சம்பளத்தை விட உயர்வானதாக இருந்ததால்தான் இப்போது இந்த மூன்று பேரின் ஊதியங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநரின் ஊதிய உயர்வு குறித்து உரிய முடிவை மேற்கொள்ளுமாறு அந்த மாநில அரசுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.