எலுமிச்சம் பழத்தில் அம்மன் காட்சி தருவதாக பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே எலுமிச்சம் பழத்தில் அம்மன் காட்சி தருவதாக செய்தி பரவியதால் பக்தர்கள் கூடி பரவசம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் , எட்டயபுரம் நடுவிற்பட்டியை சேர்ந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தை சேர்ந்த பக்தர்கள் மேல்மருவத்தூர் செல்ல மாலையணிந்து விரதம் இருந்து கடந்த 5 ம் தேதி கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்தனர்.
பின்பு தங்கள் ஊரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்திற்கு சென்று பூசை செய்தனர்.
அப்போது பூசைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களுடன் எலுமிச்சம் பழமும் இருந்தது. அந்த பழத்தின் மீது மேல் மருவத்தூர் அம்மன் தோன்றியதாக பெண் பக்தர் ஒருவர் கூறினார். இதை கேட்டு அங்கிருந்த சிலர் பரவசம் அடைந்து சத்தம் போட்டனர்.
அதைக் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஒடி வந்து எலுமிச்சம் பழத்தில் அம்மன் உள்ளதா என பார்த்த வண்ணம் இருந்தனர்.
இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவ அருகில் உள்ள ஊர் மக்கள் எல்லாம் கும்பல்கும்பலாக வந்து பயபக்தியுடன் பழத்தை வணங்கினர்.
பெண்கள் சிலர் பால், பழம், பூசை பொருட்கள் எல்லாம் வாங்கி வந்தனர். அம்மன் தெரிவதாக கூறிய அந்த எலுமிச்சம் பழத்திற்கு சிறப்பு பூசைகள் செய்தனர்.