வாஜ்பாய்க்கு பாரத ரத்னா: பாஜக - காங். மோதல்!
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் எல்.கே.அத்வானி கடிதம் எழுதியுள்ளார். இதை மத்திய அமைச்சர் பி.ஆர்.தாஸ் முன்ஷி விமர்சித்துள்ளார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 5ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அத்வானி ஒரு கடிதம் எழுதினார். அதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வழங்கிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
நேரு, இந்திரா காந்திக்குப் பிறகு அதிக காலம் பிரதமர் பதவியை வகித்த பெருமைக்குரியவர் வாஜ்பாய் மட்டுமே. மேலும் நாட்டிலேயே அதிக காலம் எம்.பி பதவியை அலங்கரித்த பெருமையும் வாஜ்பாய்க்கு உண்டு.
ஆட்சியில் இருந்தபோதும், ஆட்சியில் இல்லாதபோதும் இந்தியாவின் ஜனநாயகம் தழைத்தோங்க வாஜ்பாய் பாடுபட்டுள்ளார். அதைக் கெளரவிக்கும் வகையில், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வாஜ்பாய்க்கு வழங்கிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
முன்ஷி கண்டனம்:
அத்வானியின் இந்த கடிதத்திற்கு மத்திய அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஏன் இப்படி ஒரு கடிதத்தை அத்வானி எழுதினார் என்று தெரியவில்லை. வாஜ்பாய்க்கு முதலில் அவரது கட்சியில் உரிய மரியாதையும், கெளரவமும் இருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன்.
பாரத ரத்னா விருது போன்றவை குறித்து கடிதப் பரிமாற்றத்தின் மூலம் முடிவு செய்து விட முடியாது.
பத்மஸ்ரீ விருது வேண்டும், பத்மபூஷன் விருது வேண்டும் என்று கோரி பலரும் கடிதம் எழுதுகிறார்கள், கோரிக்கை விடுக்கிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் முடிவு செய்ய உரிய குழு உள்ளது. அதுதான் இதுகுறித்து முடிவு செய்யும் என்றார் முன்ஷி.
பாஜக பாய்ச்சல்:
முன்ஷியின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கும், பிரதமருக்கும் இடையிலான தகவல் தொடர்பு குறித்து ஒரு மத்திய அமைச்சர் கருத்து சொல்ல என்ன உரிமை உள்ளது?. கருத்து சொல்ல முன்ஷி யார்?.
இதுபோன்ற விவகாரங்களில் கருத்து சொல்ல முன்ஷிக்கு அருகதையே கிடையாது என்றார் காட்டமாக.
பிரதமர் நழுவல்:
இதற்கிடையே, அத்வானியின் கோரிக்கை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக பதில் சொல்லாமல் நழுவினார்.
இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அத்வானியிடமிருந்து கடிதம் வரப் பெற்றுள்ளேன் என்று மட்டும் தெரிவித்தார்.