டெல்லி ரயிலில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு-பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
டெல்லி: அஸ்ஸாமிலிருந்து டெல்லி வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு உரிய நேரத்தில் அகற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கவுஹாத்தியில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் பீகார் மாநிலம் கதிகார் ரயில் நிலையத்தை இன்று காலை 6.30 மணிக்கு வந்தடைந்தது.
அப்போது ஒரு பெட்டியின் இருக்கைக்கு கீழ் பேப்பரில் சுற்றப்பட்ட பார்சல் இருப்பதைப் பார்த்த ஒரு பயணி அதை பிரித்தார். அதில் வெடிகுண்டுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனே ரயில் என்ஜின் டிரைவரிடம் போய் தகவல் சொன்னார்.
அவர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தவுடன், வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்த போலீசார் அனைவரையும் கீழே இறக்கி வெடிகுண்டை மீட்டு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொண்டு சென்று செயலிழக்க செய்தனர்.
இதனால் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணிநேரம் தாமதமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.
உ.பி.யில் குண்டுவெடிப்பு:
இதற்கிடையில் உத்தரப்பிரதேசம், ராம்பூரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையம் அருகில் 2 குண்டுகள் வெடித்தன. ஆனால் இதில் யாருக்கும் உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை.