ஈழப் பிரச்சினைக்கு 'இந்தியா மாடல்': குஹா யோசனை
பெங்களூர்: இந்தியாவில் உள்ளதைப் போன்ற பல்வேறு சமுதாயத்தினரும் இணைந்து வாழும் முறையைப் போல இலங்கையிலும் கடைப்பிடித்தால் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என பிரபல வரலாற்றியலாளரும், சமூகவாதியுமான ராமச்சந்திர குஹா யோசனை தெரிவித்துள்ளார்
சமரசத்தின் அழகு என்ற தலைப்பில் பெங்களூரில் நடந்த கப்பன் நினைவு உரையின்போது குஹா பேசுகையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சமரசப் பாதைக்குத் திரும்பி வர வேண்டும். தனது கொள்கைகளை தளர்த்திக் கொள்ள முன்வர வேண்டும்.
75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ள போரை நிறுத்த வேண்டும் என்றால் பிரபாகரன் இறங்கி வர வேண்டும்.
இலங்கை அரசியல் சட்டத்தில் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். நாட்டின் மதமாக பெளத்தம் மட்டும் இருக்கக் கூடாது. இந்தியாவில் உள்ளதைப் போல பல்வேறு இனத்தவரும், சமூகத்தினரும் இணைந்து கூட்டமைப்புத் தத்துவத்தின் கீழ் வாழ்வதைப் போல இலங்கையிலும் அமல்படுத்த வேண்டும். அதுதான் பிரச்சினைக்கு ஒரே தீர்வு.
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு மொழி வாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அது செய்யப்பட்டிருக்காவிட்டால் இந்தியாவின் ஒற்றுமை பெரும் கேள்விகுறியாயிருக்கும். ஆனால் நமது தலைவர்கள் மொழி வாரியான மாநிலங்களை அமைத்த பின்னர் இந்தியாவின் ஒற்றுமை உறுதி செய்யப்பட்டது, வலுப்பட்டது.
இதைச் செய்திராமல், இந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக, ஆட்சி மொழியாக அறிக்க முயன்றிருந்தால் பிற மொழிகளைப் பேசுவோரிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கும்.
இலங்கை மற்றும் காஷ்மீர் பிரச்சினைகள் இன்னும் தீர்வு காணப்பட முடியாமலேயே உள்ளன. இதன் மூலம் இரு தரப்பிலும் தாக்குதல்கள், பதில் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதன் மூலம் பிரச்சினை மேலும் பெரிதாகியுள்ளது என்றார் குஹா.












Click it and Unblock the Notifications