ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் அதிரடி தடை

தமிழகத்தின் வீர விளையாட்டாக வர்ணிக்கப்படுவது ஜல்லிக்கட்டு. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ் பெற்றது. 3வது நூற்றாண்டு முதல் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீப காலமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது மாடுகள் முட்டி உயிர்ப் பலி ஏற்படுவது அதிகரித்து வந்தது. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் (இவரது மகன் ஜல்லிக்கட்டில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு அதை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் ஜல்லிக்கட்டை நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதித்து சில நிபந்தனைகளும் விதித்தது. அதன்படி கடந்த பொங்கலின்போது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர் நேரில் பார்வையிட்டு, கண்காணித்து எந்தவித உயிர்ப் பலியும், அசம்பாவிதமும் ஏற்படாமல் ஏற்பாடுகள் செய்தார்.
இருப்பினும் சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிலர் அப்பீல் செய்தனர். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க வேண்டும், அதற்காக தடையை விலக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
தமிழக அரசு சார்பிலும் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.
ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு - தமிழக அரசு
தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் ஒரு முக்கிய அம்சமாக ஜல்லிக்கட்டு இடம்பெற்றுள்ளது.
எனனவே பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டின்போது உயிர்ப்பலி உள்ளிட்ட அசம்பாவிதம் ஏற்படாத வகையில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு தயாராக உள்ளது.
போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு எந்தவித சித்திரவதையும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும். போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் முறைப்படுத்தப்பட்டு நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை தமிழக அரசும், மதுரை மாவட்ட நிர்வாகமும் முறையாக கடைப்பிடித்ததால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்ைல என்பதை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், காளைகளை சித்திரவதைப்படுத்தி, அதைப்பிடிப்பது என்பது மிகவும் கொடூரமானது. எனவே இதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கூடாது என்று வாதிடப்பட்டது.
காட்டுமிராண்டித்தனம்!
அனைத்துத் தரப்பு விளக்கத்தையும் ஆராய்ந்த பின்னர் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதுகுறித்து நீதிபதிகள் அளித்த உத்தரவில், தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இது மிகவும் காட்டுமிராண்டித்தனமான ஒரு பவழக்கம். இதை நிறுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. இதுதான் சரியான நேரம். அனைவரும் நாகரீகமாக மாற வேண்டும்.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது தொடரும். அதேசமயம், வேண்டுமானால், ரேக்ளா ரேஸ், மாட்டு வண்டிப் பந்தயம் போன்றவற்றை நடத்திக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சியில் மதுரை கலெக்டர்
மதுரை மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக உச்சநீதிமன்றத்திற்கு இன்று வந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர் பெரும் அதிர்ச்சியுடன் காணப்பட்டார். தீர்ப்பு அவருக்கு திருப்தி தரவில்ைல என்பது அவரது முகமே காட்டிக் கொடுப்பதாக இருந்தது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்காக காத்திருந்த தென் மாவட்டத்தினர், குறிப்பாக அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications