போலி அதிமுக பிரமுகருக்கு விருந்து வைத்து ஏமாந்த நிர்வாகிகள்
கரூர்: அதிமுக தலைமைக் கழக நிர்வாகி என்று கூறி கரூரில் மோசடியில் ஈடுபட்ட பிரமுகருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
நேற்று காலை கரூர் அதிமுக எம்எல்ஏ அலுவலகத்திற்கு ஒருவர் வந்தார். அங்கு தன்னை அதிமுக தலைமைக் கழக முக்கிய நிர்வாகி என்றும், கரூர் தொகுதி எம்எல்ஏ செந்தில் பாலாஜி, மற்றும் கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன் குறித்து புகார்கள் வந்துள்ளன. அதுகுறித்து குறித்து ரகசியமாக விசாரிக்க வந்துள்ளதாக அங்குள்ள கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் பயந்து போன அவர்கள் அந்த டிப்டாப் ஆசாமியை கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன் குடியிருக்கும் தோப்புக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அந்த நபருக்கு தடபுடலாக விருந்து உபச்சாரம் நடந்தது. அப்போது அந்த நபர் தனக்கு பணம் கொடுத்தால் தான் விசாரித்து வைத்துள்ள சம்பவங்களை மூடி மறைத்து விடுவதாக கூறியுள்ளார்.
இந்த இடத்தில் நெடுஞ்செழியனுக்கு சந்தேகம் வந்துள்ளது. உடனடியாக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியிடம் தெரிவித்தார்.
இது குறித்து விசாரித்து உண்மையை அறிந்து தகவல் தர வேண்டி கரூரில் உள்ள ஜெயா டிவி நிருபருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதன் பேரில், விசாரணையில் இறங்கிய ஜெயா டிவி நிருபர், தனது விசாரணையில் அங்கு வந்த டிப்டாப் ஆசாமி போலியானவர் என்பதை தமது அலுவலகத்திற்கும், மாவட்ட செயலாளருக்கும் தெரிவித்தார்.
இதனால் கோபம் அடைந்த அதிமுகவினர் அந்த நபரை நையப்புடைத்தனர். அவர் அணிந்திருந்த பேண்ட், சட்டை கிழியும் வரை அடித்து உதைத்தனர்.
அந்த நபர் திருநெல்வேலியை சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் மணிகண்டன் என்பதும் தெரியவந்தது. பலத்த அடி வாங்கிய அந்த நபர் அதிமுகவினரின் பிடியிலிருந்து தப்பி ஓடி விட்டார். அவரை அதிமுகவினர் தேடி வருகின்றனர்.
தலைமைக் கழக நிர்வாகி என்று கூறி வந்தவருக்கு விருந்து வைத்து ஏமாந்த அதிமுகவினர் விவகாரம் கரூர் அரசியல் வட்டாரத்தை கலகலக்க வைத்துள்ளது.