அதிமுக-பாஜக கூட்டணி தமிழகத்துக்கு நல்லதல்ல: சிபிஎம்
மதுரை: மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக மதவெறி சக்திகளோடு கைகோர்த்துள்ளது தமிழகத்தின் ஒற்றுமைக்கு ஆபத்தாக அமையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கடந்த 3 நாட்களாக நடந்தது. இந்த மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
இதுகுறித்து மத்திய குழு உறுப்பினர்கள் வரதராஜன், டி.கே. ரங்கராஜன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். இப்பிரச்சனையில் மத்திய அரசின் அணுகு முறை ஊசலாட்டமாக உள்ளது. அதை தவிர்த்து இந்த திட்டம் உடனே நிறைவேற ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சில்லரை வர்த்தகத்தில் பெரும் முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது. இதனால் சுமார் 4 கோடிக்கும் மேலான சிறு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் நலன் காக்க மத்திய அரசு பெரிய நிறுவனங்கள் இந்த ஈடுபாட்டை ஒழுங்கு படுத்த வேண்டும்.
மாநிலத்தில் முக்கிய எதிர் கட்சியாக உள்ள அதிமுக மதவெறி சக்திகளோடு கைகோர்த்துள்ளது. இது தமிழகத்தின் ஒற்றுமைக்கு ஆபத்தாக அமையும்.
கூட்டுறவு தேர்தலை ஜனநாயக அடிப்படையில் உடனே நடத்த வேண்டும்.
தொழில் வளர்ச்சிக்கு தேவையான மின் சக்தி குறித்து முறையான கவனம் செலுத்தப்படவில்லை. அதனால் தான் தமிழகம் மின்வெட்டை சந்திக்க நேர்ந்துள்ளது.
டாக்டர் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றி விவசாயிகளை மீட்க மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்கள்.