தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்படும்: கருணாநிதி

தமிழ் மையம் மற்றும் தமிழக அரசின் சுற்றுலா, கலைப் பண்பாட்டுத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு வார கால சென்னை சங்கமம் -2008 கலாச்சாரத் திருவிழா நேற்று மாலை தொடங்கியது.
ஐஐடி வளாகத்தில் நடந்த விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு சங்கமம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், சென்னை சங்கமம் விழா ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது கொண்டாடப்பட வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், தமிழர்களின் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள்தான் என்று தமிழ்ச் சான்றோர்கள் கூறி வருகின்றன. ஒன்றல்ல, இரண்டல்ல, 500 தமிழ்ப் புலவர்கள் இதை ஆய்வு செய்து, உறுதிப்படுத்திய பின்னர், தை முதல் நாள்தான் தமிழர்களின் புத்தாண்டு என்று தெளிவாக தெரிவித்துள்ளனர்.
எனவே சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை மாற்றி, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. விரைவில் அது நடக்கும்.
இன்றைய நிகழ்ச்சிக்கு ஞாயிறு போற்றுதும் என்ற பெயரிட்டுள்ளனர். மிகவும் பொருத்தமான பெயர். எனக்கு மிகவும் பரிச்சயமான, பிடித்தமான பெயரும் கூட.
எனது யோகா மாஸ்டர் தேசிகாச்சார்யா, ஒரு முறை என்னை நாராயண மந்திரத்தை உச்சரிக்கக் கூறினார். நான் அவரிடம், அந்த மந்திரத்தின் அர்த்தம் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் அதற்கு சூரியனை வணங்குவது என்று பொருளாகும் என்றார். யோகா கற்றுக் கொள்வதற்கு முதல் படி சூரிய நமஸ்காரம்தான் என்றார்.
இருப்பினும் நாராயண மந்திரத்தை நான் உச்சரிக்காமல் அதை தமிழில் மொழிபெயர்த்து ஞாயிறு போற்றுதும் என மாற்றி உச்சரித்தேன். அதில் தேசிகாச்சார்யாவுக்கும் சந்தோஷம் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications