மதுரை பிரபல ரவுடி 'டாக்' ரவி கோர்ட்டில் சரண்-கைது
மதுரை: சென்னை போலீஸார் வலை வீசி தேடி வந்த மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி டாக் (Dog) ரவி மதுரை மாவட்டம் திருமங்கலம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். அவரை பின்னர் போலீஸார் கைது செய்தனர்.
மதுரையைச் ேசர்ந்தவர் டாக் ரவி. இவர் மதுரையைக் கலக்கி வந்த பிரபல ரவுடி. இவர் மீது பத்துக்கும் மேற்பட்ட கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
பலமுறை கைது செய்யப்பட்ட டாக் ரவி 6 மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கில் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்து தலைமறைவாகி விட்டார். சென்னையில் வந்து அவர் பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டாக் ரவிக்கு எதிர் கோஷ்டியான அழகர் மற்றும் திண்டுக்கல் பாண்டியன் ஆகியோர் தலைமையிலான ரவுடி கோஷ்டியினர் டாக் ரவியைத் தீர்த்துக் கட்ட சென்னைக்குப் படையெடுத்து வந்தனர்.
இவர்களில் அழகர் மற்றும் அவரது கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை சில நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
இதையடுத்து சென்னைக்குள் ஊடுறுவியுள்ள டாக் ரவி, திண்டுக்கல் பாண்டியன் மற்றும் அவர்களது கும்பலைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க 30க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.
இவர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ரவுடிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில் ரவுடி டாக் ரவி, இன்று காலை திருமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஆனால் அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை பின்னர் போலீஸார் கைது செய்தனர். தங்களது கட்டுப்பாட்டில் அவரை எடுத்து தீவிரமாக விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
நேற்றுதான் வரிச்சியூர் செல்வம் என்கிற இன்னொரு பிரபல தாதாவை போலீஸார் மதுரையில் கைது செய்தனர். இந்த நிலையில் டாக் ரவியும் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.