சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க தடை: அதிமுக எம்.எல்.ஏ வழக்கு
சென்னை: சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ போஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தமிழக சட்டசபை குளிர் காலக் கூட்டத் தொடரின்போது திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ரகளை செய்த அதிமுக எம்.எல்.ஏக்களை அவையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார். அப்போது திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ போஸ், அவைக் காவலர் ஒருவரின் தொப்பியைப் பறித்து சபாநாயகரை நோக்கி வீசினார்.
இதையடுத்து அந்தக் கூட்டத் தொடர் முழுவதும் மற்றும் அடுத்த கூட்டத் தொடரின் முதல் பத்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து அவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் வருகிற 23ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், போஸ் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், கடந்த ஆண்டு நடந்த சம்பவத்திற்கு இந்த ஆண்டு தடை விதிப்பது நியாயமானதல்ல. கடந்த ஆண்டு சம்பவத்திற்குரிய தண்டனையை நான் அனுபவித்து விட்டேன். எனவே இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் முதல் பத்து நாட்களுக்கு நான் கலந்து கொள்ள விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி தனபால் முன்னிலையில் இன்று மாலை விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications