வாசிம் அக்ரம் வீட்டில் முகமூடி கொள்ளை
லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரமின் வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வாசிம் அக்ரமின் வீடு லாகூரில் உள்ளது. அக்ரம் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அவரது வீட்டில் உள்ளவர்கள் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியில் சென்றனர். வீட்டில் அக்ரமின் வயதான தாயார் இர்ஷார் கவுசர் மட்டும் இருந்தார்.
யாரும் வீட்டில் இல்லாததை தெரிந்து 3 முகமூடி கொள்ளையர்கள் அக்ரமின் வீட்டுக்குள் புகுந்து அவரின் தாயார் இர்ஷாத்தை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மோப்ப நாய்களுடன் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரின் வீட்டில் கொள்ளை போன சம்பவத்தை தொடர்ந்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.