மலேசியாவில் மார்ச்சில் தேர்தல் - கட்சிகள் தீவிரம்
சிங்கப்பூர்: தமிழர் பிரச்சினை ஒரு பக்கம் புகைந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், மலேசியாவில் மார்ச் மாதத் தொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து மூத்த அமைச்சர் ஒருவர் கூறியதாக கோலாலம்பூர் இதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. மார்ச் மாத முதல் வாரத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும். அதற்கு மேலும் தேர்தல் தள்ளிப் போக வாய்ப்பில்லை என்று அந்த மூத்த அமைச்சர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தலையொட்டி ஆளுங்கூட்டணியில் உள்ள கட்சிகள் ஜோஹர், கெடா, செலங்கூர், கலாந்தன், தெரங்கனு ஆகிய மாகாணங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
ஐக்கிய மலாய் தேசிய கழகத்தின் (உம்னோ) தலைமை செய்தித் தொடர்பாளர் டான்ஸ்ரீ முகம்மது தயீப் கூறுகையில், தேர்தலுக்கு உம்னோ தயார். எப்போதுமே தேர்தலை சந்திக்க நாங்கள் ஆயத்த நிலையில்தான் இருந்து வருகிறோம் என்றார்.
மலேசிய பொதுத் தேர்தல் பெருமளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய அரசுக்கும், உம்னோவுக்கும் எதிராக தமிழர்களின் மனோபாவம் தற்போது உள்ளது. பெரும் அதிருப்தியுடன் தமிழர்களும் பிற இந்திய வம்சாவளியினரும் உள்ளனர். வருகிற பொதுத் தேர்தலில் இது எதிரொலிக்கக் கூடும் என்பதால் மலேசியர்களிடையே பொதுத் தேர்தல் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.