அலட்சிய பதில்-சுகாதார துணை இயக்குனரை சிறைபிடித்த மக்கள்
மார்த்தாண்டம்: குழித்துறை அருகே வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலட்சியமாக பேசியதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவரை சிறை பிடித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகேயுள்ள கன்னக்கோடை சேர்ந்த விஜயன்-செல்வி தம்பதியின் குழந்தைகள் ஜெயகர், வினிதா.
சில நாட்களுக்கு முன் வினிதாவுக்கு கடுமையான காய்ச்சலுடன், வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து வினிதா மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துவிட்டது.
வினிதாவை தொடர்ந்து அவரது தாயார் செல்வி, சகோதரன் ஜெயகர் ஆகியோரும், வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் வேறொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மார்த்தாண்டத்தை சேர்ந்த ராஜாமணி என்வரின் மனைவி விஜயா மற்றும் நேசமணி, ராஜூ ஆகியோரும் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரான டாக்டர் ரால்ப் செல்வின் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நோய் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்தனர்.
அப்போது கன்னக்கோடு கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாந்தி-பேதியை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் கூறினர்.
அத்துடன் கன்னகோடு கவுன்சிலர் ராஜசேகர், டாக்டர் ரால்ப் செல்வினிடம் எங்களுடைய பகுதிகள் அனைத்தும் சுகாதார கேடாக இருக்கிறது. நோய் வந்தால் அவசர சிகிச்சை பெற முடியவில்லை என்றார்.
அதற்கு டாக்டர் ரால்ப் செல்வின் இதுகுறித்து நீங்கள் நகராட்சியிடம்தான் தெரிவிக்க வேண்டும் என்று அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்படியானால் நீங்கள் எதற்காக வேலை செய்கிறீர்கள், அரசாங்கத்தில் வாங்குகிற சம்பளத்திற்கு நீங்கள் வேலை செய்ய மாட்டீர்களா, மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார துறையே கெட்டு குட்டி சுவராகி விட்டது என்று அவரிடம் வாக்குவாதம் செய்தனர்.
அவர்களிடம் செல்வின் கோபமாக பேசவே அவரை சிறை பிடித்தனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மற்ற அதிகாரிகள் விரைந்து வந்து ஊர் பெரியவர்களுடன் பேசி அவரை விடுவித்தனர்.












Click it and Unblock the Notifications