மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்வதாக மிரட்டிய தமிழர்
துபாய்: துபாயில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் மின் கம்பத்தில் ஏறி கீழே குதித்துத் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார். அவரை போலீஸார் உரிய நேரத்தில் தடுத்து காப்பாற்றினர்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் முருகேஷ் (40). இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று திடீரென இவர் 30 மீட்டர் உயரமுடைய மின் கம்பத்தில் ஏறிக் கொண்டார். கம்பத்தின் உச்சிக்குப் போன அவர் அங்கிருந்தபடி சத்தம் போட்டு சில கோரிக்கைகளைக் கூறினார். அதை நிறைவேற்றாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றார் அவர்.
இதைப் பார்த்ததும் அங்கு கூட்டம் திரண்டு விட்டது. போலீஸார் விரைந்து வந்தனர்.
முதலில் எனக்கு தொழிற்சாலை கட்ட நிலம் வேண்டும் என்றார் முருகேஷ். பின்னர் எனக்கு ஊரை விட்டுப் பிரிந்ததால் மிகுந்த ஏக்கமாக உள்ளது. எனவே நான் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.
அவரது பேச்சால் போலீஸார் பெரும் குழப்பமடைந்தனர். அவருக்கு மன நிலை பாதிக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் வந்தது. சில மணி நேரம் நடந்த இந்த போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
முருகேஷின் தற்கொலை முயற்சியை சாதுரியமாக பேசித் தடுத்த போலீஸார் அவரை கம்பத்திலிருந்து இறக்கினர். அவரை கவுன்சிலிங் மையத்திற்கு அனுப்பி கவுன்சிலிங் கொடுக்க போலீஸார் தீர்மானித்துள்ளனர்.
அரபு நாடுகளில் வேலை பார்க்கும் இந்தியத் தொழிலாளர்களிடையே தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறைந்த ஊதியம், வேலை பாதுகாப்பின்மை, குடும்பத்தை விட்டு பிரிந்து நீண்ட காலம் வசிப்பது உள்ளிட்ட காரணங்களால் விரக்தி அடையும் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.