இலங்கை கடற்படைத் தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் நடத்திய வெறித் தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 601 இயந்திரப் படகுகளில் நேற்று அதிகாலை கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு திடீரென இலங்கை கடற்படையினர் வந்தனர்.
தமிழக மீனவர்களை சுற்றிச் சூழ்ந்த அவர்கள் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் ஒரு படகில் இருந்த ராமேஸ்வரம், மல்லிகை நகரைச் சேர்ந்த சேகர் (40) என்பவர் படுகாயமடைந்தார். அவரது வலது தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. படகிலேயே அவர் மயங்கி விழுந்தார். சத்யம், செல்வம், கணேசன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
அதன் பின்னர் தமிழக மீனவர்கள் வேகம் வேகாக கரைக்குத் திரும்பினர்.
ராமேஸ்வரம் மருத்துவமனையில் முதலுதவி கொடுக்கப்பட்ட சேகர் பின்னர் ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நிறைய ரத்த இழப்பு ஏற்பட்டிருப்பதால் அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரின் இந்த தாக்குதலால் ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதி மீனவர்கள் பெரும் கோபத்துடன் காணப்படுகின்றனர்.
இலங்கை கடற்படை தொடர்ந்து இவ்வாறு தாக்கி வருவது தங்களது தினசரி வாழ்க்கையை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications